மதுபாட்டிலால் டிரைவரை தாக்கிய கும்பல்


மதுபாட்டிலால் டிரைவரை தாக்கிய கும்பல்
x

ஆலங்குடி அருகே மது பாட்டிலால் டிரைவரை மர்ம கும்பல் தாக்கியது. இதுதொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை

டிரைவர் படுகாயம்

ஆலங்குடி அருகே வடவாளம் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பிரகாஷ் (வயது 24). டிரைவர். இவர், கடந்த 20-ந் தேதி ஆலங்குடியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுக்கோட்டை-கும்மங்குளம் சாலையில் உள்ள மரப்பட்டறை அருகில் வந்த போது, அங்கு வந்த மர்மகும்பல் பிரகாஷை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டியும், கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டியும், மது பாட்டிலால் அவரை தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.

வாலிபர் கைது

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளத்திவிடுதியை சேர்ந்த சேரன் என்கிற இளஞ்சேகரன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story