தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கும்பலுக்கு வலைவீச்சு


தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கும்பலுக்கு வலைவீச்சு
x

நிலக்கோட்டை அருகே, தொழிலாளியை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள வேலக்கவுண்டண்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2-ந்தேதி நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செல்வம், சிலுக்குவார்பட்டியை சேர்ந்த விவசாயி முத்தப்பன் என்பவரின் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2-ந்தேதி இரவு தோட்டத்து வீட்டின் முன்பு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த செல்வத்தை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்தப்பனையும் அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

படுகாயமடைந்த முத்தப்பனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் திருடும் நோக்கத்தில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வந்தனரா? அல்லது முத்தப்பன், செல்வம் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடந்ததா? என்று விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தப்பி சென்ற மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

---


Next Story