வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன
![வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன](https://media.dailythanthi.com/h-upload/2022/05/31/716021-panagudi-1.webp)
பணகுடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு ெவடித்து வாலிபரின் கைகள் சிதைந்தன.
பணகுடி:
பணகுடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு ெவடித்து வாலிபரின் கைகள் சிதைந்தன.
வாலிபர்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 34).
இவர் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டு இருப்பதாகவும், அதன்பேரில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு வெடிகுண்டு வெடித்தது
நேற்று காலையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக இசக்கிமுத்து தனது வீட்டின் வெளிப்புறத்தில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் இசக்கிமுத்துவின் கைகள் சிதைந்து, பலத்த காயம் ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். மேலும், பணகுடி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், படுகாயம் அடைந்த இசக்கிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் போலீசார், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். அங்கு 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காமல் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி பாதுகாப்பாக அகற்றினர். இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.