இட்லி பாட்டிக்கு கிடைத்த கவுரவம் "ரொம்ப சந்தோஷமா இருக்கு" - கமலாத்தாள் பாட்டி நெகிழ்ச்சி...!


இட்லி பாட்டிக்கு கிடைத்த கவுரவம் ரொம்ப சந்தோஷமா இருக்கு - கமலாத்தாள் பாட்டி நெகிழ்ச்சி...!
x

மதுரையில் நடைபெற்ற பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்க விழாவில் இட்லி பாட்டி கமலாத்தாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

மதுரை,

கோவை ஆலந்துறை அடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்று அங்கு உள்ளவர்களால் அழைக்கப்படுகிறார். 25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்ய தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார்.

ஓட்டல்களில் ஒரு இட்லி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஏழை, எளிய மக்களின் பசியாற வேண்டும் என்று நோக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியும், சாம்பார், சட்னி ஆகியவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகிறார். இட்லி பாட்டி என்று சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாக மாறிய ககமலாத்தாள் பாட்டிக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில நடைபெற்ற பள்ளிகளில் காலை சிற்றுண்டி தொடக்கவிழாவில் கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவுரவித்தார். ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு 'ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி' என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி அவரை நெகிழ்ச்சி கொள்ள செய்தார்.

இதுகுறித்து இட்லி பாட்டி கமலாத்தாள் கூறுகையில், ரொம்ப சந்தோஷமா, பூரிப்பா இருக்கு. மேலும், பள்ளிகளில் காலை உணவு திட்டம் ரொம்ப நல்ல திட்டம் என்று தெரிவித்தார்.




Next Story