ஜல்ஜீவன் திட்டத்தால் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது


ஜல்ஜீவன் திட்டத்தால் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது
x

கரூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதில் 62 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

குடிநீர் இணைப்பு

பொதுமக்களுக்கு குடிநீர் வசதி என்பது அத்தியாவசியமானது. மத்திய, மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வீடுகளில் குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டு விட்டன. கிராமப்புறங்களை பொறுத்தவரை அந்த ஊரில் உள்ள குடிநீர் திட்டம் மூலம் தான் குடிநீர் வசதி உள்ளது. மேலும் சில கிராமங்களில் ஊரணி, கிணறுகள், குளங்கள் மூலம் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பல குக்கிராமங்களில் தண்ணீர் வசதி என்பது இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. இந்த நிலையில் 60 சதவீதத்துக்கும் குறைவான குடிநீர்குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களில் இந்த திட்ட செயல்பாடுகள் மூலம் மிக சிறப்பாக செயல்பட்டதில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்து, சமீபத்தில் விருது கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்குவதில் 62 சதவீத பணிகள் முடித்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

2,179 குக்கிராமங்கள்

இத்திட்டம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி மந்திரச்சலகம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 157 ஊராட்சிகளில் 2,179 குக்கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் அவர்களது வீட்டின் முன்பே கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.

மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 464 வீடுகளில், 47 ஆயிரத்து 678 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டில் 596 கிராமங்களில் 69 ஆயிரத்து 490 வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது இத்திட்டத்திற்கான செலவு ரூ.71 கோடியே 19 லட்சம் ஆகும்.

விரைவில்...

இதேபோல் 2021-22-ம் ஆண்டில் 229 கிராமங்களில் 17,009 வீடுகளுக்கு ரூ.15 கோடியே 17 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 2022-23-ம் ஆண்டில் 1,228 கிராமங்களில் 65,241 வீடுகளுக்கு ரூ.73 கோடியே 70 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய்இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. வருகிற 2024-ம் ஆண்டுகளுக்குள் 100 சதவீத பணிகள் முடிக்கப்படும் என்றார்.

அலைச்சல் குறைவு

இத்திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளை அந்தந்த ஊராட்சியே தேர்வு செய்கிறது. அவர்களது வீட்டின் முன்பு குடிநீர் குழாய் வைத்து அதில் தண்ணீர் பிடிப்பதற்காக சிமெண்டு தளமும் அமைக்கப்படுகிறது. மேலும் குடிநீர் ஆதாரம் கணக்கிட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏற்கனவே உள்ளதா? அல்லது புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா?, குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் உள்ளதா?, ஆழ்துளை கிணறு புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா? என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப தேவை அறிந்து செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தினால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க செல்லும் அலைச்சல் குறைந்துள்ளது. கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் காதப்பாறை ஊராட்சியில் காதப்பாறை குக்கிரமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது பொதுமக்கள் எளிதில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினை இல்லை

முத்துராஜாபுரத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் கூறுகையில், எனது வீட்டின் முன்பே தற்போது குடிநீர் குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இந்த தண்ணீரை நான் குடிக்க பயன்படுத்துகிறோம். மேலும் சமையலுக்கும், குளிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம். முன்பு தண்ணீர் பிடிப்பதற்காக குடங்களை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரம் நடந்து சென்றோம். தற்போது அந்த அலைச்சல் குறைந்துள்ளது. தினமும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்சினை இல்லை என்றார்.

ஒருநாள் விட்டு ஒருநாள்

நரசிம்மபுரத்தைச் சேர்ந்த பிரியா கூறுகையில், இத்திட்டத்திற்கு முன்பு பொதுக்குழாயில் தான் தண்ணீர் பிடிப்போம். அப்போது ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் வரும். அந்த தண்ணீரையும் பிடிக்க கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அவதி அடைந்து வந்தோம். தற்போது இந்த திட்டத்தின் மூலம் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது பயனுள்ளதாக உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு குறை நீங்கி உள்ளது என்றார்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கள்ளப்பள்ளி ஊராட்சி கொடிகால் தெருவை சேர்ந்த பாப்பாத்தி கூறுகையில், இதற்கு முன்பு லாலாபேட்டை காவிரியில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரை ஏற்றி, அங்கிருந்து கள்ளப்பள்ளி ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்போது பெரும்பாலான வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி வந்தனர். இதனால் மோட்டார் இல்லாத வசதி குறைவான உள்ள வீடுகளில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினையாக இருந்து வந்தது. தற்போது மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கு வால்வு அமைக்கப்பட்டுவருவதால் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.


Next Story