கணவன்- மனைவியை தாக்கி ரூ.5½ லட்சம், நகைகள் வழிப்பறி


கணவன்- மனைவியை தாக்கி ரூ.5½ லட்சம், நகைகள் வழிப்பறி
x
தினத்தந்தி 2 July 2023 7:47 PM GMT (Updated: 3 July 2023 8:58 AM GMT)

கொண்டலாம்பட்டியில் கணவன்- மனைவியை தாக்கி ரூ.5½ லட்சம், நகைகள் வழிப்பறி செய்த 4 பேர் கொண்ட கும்பலின் துணிகர கைவரிசை

சேலம்

கொண்டலாம்பட்டி,

கொண்டலாம்பட்டி அருகே கணவன்- மனைவியை தாக்கி ரூ.5½ லட்சம், நகைகள் வழிப்பறி செய்யப்பட்டன. 4 பேர் கும்பல் இந்த துணிகர கைவரிசையில் ஈடுபட்டுள்ளது.

நகைக்கடை உரிமையாளர்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், சிவதாபுரத்தில் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் வெள்ளி நகை கடை வைத்துள்ளார். இவர், வியாபாரத்தை முடித்து விட்டு வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியுடன் மொபட்டில்யில் காட்டூரில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது 4 பேர், சுரேசை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்து ரூ.5½ லட்சம் மற்றும் 8½ கிலோ வெள்ளியை பறித்துக் கொண்டு சுரேசையும், அவருடைய மனைவியையும் தாக்கி விட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் சினிமாவை போல் இந்த சம்பவம் நடந்து முடிந்தது.

போலீஸ் தேடுகிறது

காயம் அடைந்த சுரேசும், அவருடைய மனைவியும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைக்கடை உரிமையாளரை வழிமறித்து வெள்ளி நகைகளையும், பணத்தையும் மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் கொண்டலாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவன்- மனைவியை தாக்கி நகை, பணத்தை பறித்து துணிகரமாக கைவரிசை காட்டிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story