பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து வெகுவாக குறைந்தது வினாடிக்கு 25 கனஅடி வருகிறது


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து வெகுவாக குறைந்தது வினாடிக்கு 25 கனஅடி வருகிறது
x

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் வரத்து வெகுவாக குறைந்தது. வினாடிக்கு 25 கன அடி வீதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சென்னை

செங்குன்றம்,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடுத்திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஆக 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதி நீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீரை திறந்து விட கோரி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியது.

அதன்படி கடந்த மே 1-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 510 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீர் பயன்படுத்தும் போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைவதும், தண்ணீர் குறைவாக பயன்படுத்தும் போது அதிக நீர்வரத்து இருப்பதுமாக உள்ளது.

தற்போது அங்குள்ள விவசாயிகள் அதிக நீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டு இருந்தது. பூண்டி ஏரி உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 30.27 அடியாக பதிவானது. 1.802 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர்வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீருக்காக பேபி கால்வாயில் 40 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Next Story