ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் பொருட்கள் திருட்டு


ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)

ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் பொருட்கள் திருட்டு

கோயம்புத்தூர்


கோவையில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போட்டோ ஸ்டூடியோ

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அபுமோகராஜ் (வயது 34). இவர் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஸ்டூடியோவில் ஸ்டீபன்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் அபுமோகராஜ் கடந்த 7-ந் தேதி வழக்கம்போல் வேலைகளை முடித்துக்கொண்டு ஸ்டூடியோவை மூடிவிட்டு ஆனைக்கட்டி சென்றார். பின்னர் மறுநாள் ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் ஸ்டீபன்ராஜ் கடையை திறக்க வந்தார். அப்போது ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

ரூ.15 லட்சம் பொருட்கள் திருட்டு

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்ப்டு இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அங்கு வைத்து இருந்த கணினி, சவுண்ட் சிஸ்டம், ஆடியோ இன்டர்பேஸ், கலர் கிரேடிங் சிஸ்டம் என ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் அபுமோகராஜூக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அபுமோகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story