கூலித்தொழிலாளி குத்திக்கொலை

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் கைதானார்.
போத்தனூர்
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் கைதானார்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் கூறியதாவது:-
கூலித்தொழிலாளி
கோவை வெள்ளலூர் அருகே உள்ள வள்ளியம்மைபுரம் கக்கன் வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (28). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.
முல்லை நகரை சேர்ந்தவர் முனியப்பன் (25). இவர் சிங்காநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கோபிநாத்தும், முனியப்பனும் நண்பர்களாக பழகி வந்தனர்.
குடிபோதையில் தகராறு
இவர்கள் 2 பேரும் வார இறுதி நாட்களில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கோபிநாத், முனியப்பன் ஆகியோர் மது வாங்கி வந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். மதுரைவீரன் கோவில் அருகே வந்தபோது, 'கோபிநாத்துக்கும், முனியப்பனுக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குத்திக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபிநாத்தை சரமாரியாக நெஞ்சில் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த கோபிநாத் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட அந்த வழியாக வந்தவர்கள் அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் வருவதை பார்த்த முனியப்பன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதையடுத்து பொதுமக்கள் கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த முனியப்பனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போத்தனூர் பகுதியில் பதுங்கி இருந்த முனியப்பனை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






