ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் அமைச்சர் பேட்டி

ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கட்டணத்தை இணைய வழி மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
தொடர்ந்து 28 முறை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. எனவே மக்களை பாதிக்காத வகையில் அதற்கான கட்டண மாற்றங்கள் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி இழப்பு 2011-2012-ம் ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 954 கோடியாக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.94,312 கோடியாக அதிகரித்து, 2021-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்துள்ளது. மின்சார வாரியத்தின் இழப்பை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை முந்தைய காலத்தில் எடுக்கப்படாததால் மின்சார வாரியம் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
அமல்படுத்த மனு சமர்ப்பிப்பு
2011-2012-ம் ஆண்டில் மின்சார வாரியத்திற்கு ரூ.43,493 கோடி கடன் இருந்தது. இது 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து ரூ.1,59,823 கோடியாக உள்ளது. இதனால் வட்டி ரூ.16,511 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2011-2012-ம் ஆண்டில் ரூ.16,488 கோடியாக இருந்த மின்கொள்முதல் கட்டணம் 2021-ம் ஆண்டில் ரூ.37,430 கோடியாக உள்ளது. மத்திய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு 0.5 சதவீத கூடுதல் கடன் வாங்குவதற்கு கட்டண திருத்தத்துடன் மின் சீர்திருத்தங்களின் கட்டாய நிபந்தனையை உருவாக்கி உள்ளது. மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தற்போது திருத்தியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை அமல்படுத்துவதற்கு உரிய மனு தமிழ்நாடு ஒழுங்குறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் செலுத்த வேண்டும்
வீட்டு உபயோகிப்பாளர்கள் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கட்டணத்தை இணைய வழி மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும். ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகைக்கு விடப்பட்டதை தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 வசூலிக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கான வணிக விகித பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
மின் மயானம், அங்கன்வாடி மையங்கள் பொது வசதிகள், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள், சத்துணவு மையங்கள் ஆகியவற்றை வீட்டு விகித பட்டியலில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண விகிதத்தின் கீழ் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்களுக்கு...
ஒரு நாளின் நேர மின் கட்டண விகிதம் என்பது காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள், அவை கூட்டுகை மையங்கள் அபரிதமான வெளிச்சம் பயன்பாட்டிற்கு தனியாக தற்காலிக மின் விகித பட்டியலில் மின் இணைப்பு பெறாமல் அதே மின் இணைப்பில் 5 சதவீத கூடுதல் கட்டணத்துடன் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை விட குறைவு
மின்சார கட்டணத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவுதான். மாதாந்திர மின் கணக்கீடு என்று வரும்போது, இப்போதுள்ள மின் கணக்கீட்டாளர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்த வேண்டும். எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வருகிறோம். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால் மின் கணக்கீட்டாளர்கள் தேவை இல்லை. தற்போது ஸ்மார்ட் மீட்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






