வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட் தீ வைத்து எரிப்பு


வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட் தீ வைத்து எரிப்பு
x

வீட்டின் முன் நிறுத்தியிருந்த மொபட் தீ வைத்து எரிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த வேலுவின் மகன் ராஜேஷ்கண்ணன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்கச்சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜேஷ்கண்ணனின் மொபட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். மொபட் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட ராஜேஷ்கண்ணன் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் அவர்கள் மொபட்டில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை போட்டும் அணைக்க முயன்றனர். ஆனாலும் மொபட் எரிந்து தீக்கிரையானது. அருகில் நின்று கொண்டிருந்த சைக்கிளின் சில பாகங்களும் தீயில் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ்கண்ணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மொபட்டிற்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த 15-ந்தேதி அதிகாலை பெரம்பலூர் சங்குபேட்டை பெரியார் தெருவில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story