தலையில் குழவி கல்லை போட்டு தாய் படுகொலை


தலையில் குழவி கல்லை போட்டு தாய் படுகொலை
x

விக்கிரவாண்டி அருகே மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் தாயின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் சாம்பசிவ ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி பாஞ்சாலி (வயது 70). இவர்களது மகன் விஜயகுமார்(42). டிராக்டர் டிரைவர். இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தாய் பாஞ்சாலியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை விஜயகுமார் வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் அங்கிருந்த தாய் பாஞ்சாலியிடம் மேலும் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் பெற்ற தாய் என்றும் பாராமல் அங்கு கிடந்த குழவி கல்லை எடுத்து பாஞ்சாலியின் தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விஜயகுமார் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

வலைவீச்சு

இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story