தேசிய நெடுஞ்சாலை குளம்போல் மாறியது


தேசிய நெடுஞ்சாலை குளம்போல் மாறியது
x

மழையால் தண்ணீர் தேங்கியதில் தேசிய நெடுஞ்சாலை குளம்போல் மாறியுள்ளது.

அரியலூர்

மீன்சுருட்டி:

வடிகால் வாய்க்கால் இல்லை

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் 100 அடி சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீன்சுருட்டி கடைவீதிகளில் இருபுறமும் 75 அடி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் இந்த சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க போதுமான இடம் இல்லாததால், வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.

குளம்போல் தேங்கியுள்ளது

தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மீன்சுருட்டி கடைவீதி பகுதியிலும், நெடுஞ்சாலை பகுதியிலும் மழைநீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கியுள்ளது. இருபுறமும் மழைநீர் தேங்கியதோடு, இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால், அந்த வீட்டை ேசர்ந்தவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்கள் படுக்கக்கூட இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் தேங்கியுள்ள மழைநீரால் கொசுக்கள் போன்றவை உற்பத்தியாகி, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் சாலையில் 2 அடி அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச்செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தரைக்கடைகள் வைக்கப்படும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடைவீதிக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.

கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றன. நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் பகுதியில், சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்காலை உடனடியாக அமைக்க வேண்டும். இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் பகுதியிலும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக மழைநீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story