நடப்பாண்டில் 2,065 பள்ளி மாணவர்களை கல்லூரி களப்பயணம் அழைத்துச்செல்ல திட்டம்


நடப்பாண்டில் 2,065 பள்ளி மாணவர்களை கல்லூரி களப்பயணம் அழைத்துச்செல்ல திட்டம்
x

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 2,065 பேரை கல்லூரி களப்பயணம் அழைத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கன்னியாகுமரி

நான் முதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

நான் முதல்வன் திட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பெற்றோரை இழந்த மாணவர்கள், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் போன்றோர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த கல்வி ஆண்டில் (2023-2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 59 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து குறைந்த பட்சம் பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் மொத்தம் 2,065 மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரும்போது அவர்களை பேராசிரியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் வரவேற்று கல்லூரியில் உள்ள அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள், நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம், போன்றவற்றை காண்பித்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டி அவர்களை கல்லூரியில் சேர தூண்ட வேண்டும்.

70 மாணவர்களுக்கு 1 பஸ் வீதம் அரசு பஸ்கள் வசதி செய்யப்படும். கூடுதல் பஸ்கள் தேவைப்படின் களப்பயணம் மேற்கொள்ளப்படும் கல்லூரிகள், கல்லூரி பஸ் வசதி செய்யவும், அதற்கான செலவினம், மாணவர்களுக்கான உணவு வசதி போன்றவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியிலிருந்து மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளையும் தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story