தேனி மாவட்டத்தில் 136 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை


தேனி மாவட்டத்தில் 136 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 April 2023 9:00 PM GMT (Updated: 8 April 2023 9:00 PM GMT)

தேனி மாவட்டத்தில் 136 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விடிய, விடிய வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் 136 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விடிய, விடிய வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

சிறப்பு நடவடிக்கை

தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஷ்ரா கார்க் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக அந்தந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் மாவட்டத்தில் மொத்தம் 124 குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாகன சோதனை

தேனி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அதுபோல் மாவட்டம் முழுவதும் 52 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரேநாளில் ரவுடி பட்டியலில் உள்ள 136 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டது. அதில் 19 பேருக்கு நன்னடத்தை ஜாமீன் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தில் 67 தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என போலீசார் சோதனை செய்தனர். மேலும் மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற சிறப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.


Next Story