ரம்ஜான், அட்சய திருதியையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு


ரம்ஜான், அட்சய திருதியையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
x

ரம்ஜான், அட்சய திருதியையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து. பிச்சி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை ரூ.1,800-க்கும் விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ரம்ஜான், அட்சய திருதியையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து. பிச்சி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை ரூ.1,800-க்கும் விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும் நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் பூக்கள் வருகின்றன.

தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால் அவற்றை வாங்கிச் செல்ல குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகிறார்கள்.

பிச்சி ரூ.2 ஆயிரம்

மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ பிச்சி ரூ.1,250-க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.750 உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ.1,200-ல் இருந்து ரூ.600 உயர்ந்து ரூ.1,800-க்கு விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.220, மல்லிகை ரூ.500, சம்பங்கி ரூ.150, கனகாம்பரம் ரூ.300, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.30, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.4, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.15, பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்புக்கேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.250, சிவந்தி வெள்ளை ரூ.300, கொழுந்து ரூ.60, மருக்கொழுந்து ரூ.80 என விற்பனையானது.

ரம்ஜான் பண்டிகை...

இதுகுறித்து பூ வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், "கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பிச்சி, முல்லை பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும், நாளை (அதாவது இன்று) ரம்ஜான் பண்டிகை என்பதாலும், நாளை 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திருதியை, முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது" என்றார்.


Next Story