பூக்கள் விலை கடும் உயர்வு


பூக்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.3,600-க்கு விற்பனையானது.

ராமநாதபுரம்

பொங்கல் பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.3,600-க்கு விற்பனையானது.

பூக்கள் விலை உயர்வு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கிய போது அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போடுவதால் பூக்கள் விலை கிடுகிடுவென ஏறியது. தொடர்ந்து ஏற்ற நிலையில் இருந்து வந்த பூக்களின் விலை கார்த்திகை மாதம் முடிய உள்ளதால் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு நேர்மாறாக பூக்களின் விலை முன்பை விட இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த விலையை விட பூக்களின் விலை 2 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் கோவில் விழா, பொங்கல் பண்டிகை போன்ற தொடர் விசேஷங்கள் காரணமாக அதிகளவில் பூக்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நேற்று பூ வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் பூ வியாபாரி ஆனந்தகுமார் கூறியதாவது:-

ரூ.3,600-க்கு விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தின் பூ தேவையை மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வாங்கிதான் பூர்த்தி செய்து வருகிறோம். கார்த்திகை மாதத்திற்கு முன்பு வரை மல்லிகை ரூ.400 முதல் 500 வரைதான் விற்பனையானது. கார்த்திகை மாதம் தொடங்கியதும் மல்லிகை விலை கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.

தற்போது 3 ஆயிரத்து 600 என்று உச்சத்தை தொட்டுள்ளது. ஜாதி பிச்சி ரூ.1,300 விற்பனையானது தற்போது ரூ.2 ஆயிரமாகவும், முல்லை ரூ.1,800 விற்பனையானது தற்போது ரூ.2 ஆயிரத்து 600 ஆகவும், கனகாம்பரம் ரூ.1,400 என்று இருந்த நிலையில் தற்போது ரூ.2 ஆயிரத்து 800 ஆகவும், ரோஜா மலர்கள் ரூ.200 என்ற விலையில் இருந்து தற்போது ரூ.400 ஆகவும் உச்சத்தை தொட்டுள்ளது.

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் செல்வதாலும், பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசம் வருகிறது என்பதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதிக விலை என்றாலும் தேவையின் காரணமாக மக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு அடுத்த மாதம் இறுதியில்தான் குறையும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story