தொடர்ந்து பேச வேண்டும் என தொல்லை கொடுத்த பூசாரி... தற்கொலைக்கு முயன்ற பெண்


தொடர்ந்து பேச வேண்டும் என தொல்லை கொடுத்த பூசாரி... தற்கொலைக்கு முயன்ற பெண்
x

தன்னிடம் பேசுவதை நிறுத்திய பெண்ணை, பூசாரி தகாத வார்த்தையில் பேசியது மட்டுமல்லாமல், தாக்கவும் செய்துள்ளார்.

கோவை,

கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் 41 வயதுக்காரர் ஒருவர் பூசாரியாக உள்ளார். இவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள 40 வயது பெண்ணிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த விவரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. உடனே அவர் அந்த பூசாரியிடம் சென்று, தனது மனைவியிடம் செல்போனில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்து மனைவியையும் கண்டித்துள்ளார். ஆனால் பூசாரிக்கு அந்த பெண்ணை விட மனதில்லை. அந்த பெண் தனியாக நடந்து செல்லும் பொழுது, ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்; நீ தொடர்ந்து என்னிடம் பேச வேண்டும் என்று தொந்தரவு செய்துள்ளார்.

பூசாரியின் ஆசையில் விபரீதம் உள்ளது என்பதை அறிந்த அந்த பெண், போதும் இனி பேச வேண்டாம், நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி செல்ல நினைத்தாள். ஆனால் அந்த பூசாரியால் அந்த பெண்ணை மறக்க முடியவில்லை. அவள் மறந்து விட்டாள் என்று தெரிந்ததும் பூசாரியால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

இதனால் அந்த பெண்ணை தகாத வார்த்தையில் பேசியது மட்டுமல்லாமல், தாக்கவும் செய்துள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டுக்கு வந்த அந்த பெண், கடும் மன உளைச்சலில் இருந்தார். திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில், மனைவியின் தற்கொலை முயற்சிக்கு, கோவில் பூசாரிதான் காரணம் என கருதிய அந்த பெண்ணின் கணவர் ஆவேசத்துடன் தனக்கு தெரிந்த 2 பேரை அழைத்து கொண்டு பூசாரி இருந்த கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் முன்பு நின்று கொண்டிருந்த பூசாரியிடம் அவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பூசாரியை அடித்து உதைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொல்லை கொடுத்த பூசாரியால், பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story