காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற ஏடுகள் குழு ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற ஏடுகள் குழு ஆய்வு
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற ஏடுகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம்

ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற ஏடுகள் குழுவின் தலைவர் மற்றும் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் காஞ்சீபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மசமுத்திரத்தில் சுயநிதி திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு, குடியிருப்புவாசிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் ரூ.190.08 கோடி திட்ட மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு செய்யப்படவேண்டிய கூடுதல் கட்டமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வு கூட்டம்

பின்னர் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் கீழிகதிர்பூரில் இயங்கி வரும் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப்பூங்காவையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள 6 தறிக்கூடங்களில் உள்ள தறிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அங்கு நெசவு செய்யும் ரகங்களை பற்றி பட்டுப்பூங்காவில் பணியாற்றும் நெசவாளர்களிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற ஏடுகள் குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களிடம் குழுவின் தலைவர் கேட்டறிந்தார்.

இதில் சட்டமன்ற ஏடுகள் குழு உறுப்பினர்கள் அப்துல் வஹாப், புகழேந்தி, மாவட்ட கலெக்டர் டாக்டர்ஆர்த்தி, சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், சட்டமன்ற கூடுதல் செயலாளர் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story