ஏப்ரல் மாத இறுதிக்குள் ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும்


ஏப்ரல் மாத இறுதிக்குள் ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும்
x

ராஜபாளையத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

கடன் வழங்கும் முகாம்

ராஜபாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது 1,607 பேருக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை அமைச்சர் வழங்கினார்.

இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார், சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேம்பால பணிகள்

ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா தொற்று காலத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் ஏப்ரல் மாத இறுதிக்குள் மேம்பாலம் திறக்கப்படும்.

மேம்பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட உள்ள சாலை பணிகள் அடுத்த 2 மாதத்திற்குள் நிறைவு பெறும். இதேபோல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 விழுக்காடுக்கு மேல் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

அதிகாரிகளுக்கு பயம்

புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி சாலை வரை இணைப்பு சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும். ராஜபாளையம் மட்டுமின்றி சத்தியமங்கலம், பொள்ளாச்சி ஆகிய 3 நகராட்சிகளிலும் சொத்து வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரியை குறைக்க கோரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் வரி குறைக்கப்படும். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்பதுதான் முதல்-அமைச்சரின் எண்ணம். மக்களிடம் லஞ்சம் பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முடிவுகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story