சாலைப்பணியாளர்கள் பட்டை, நாமம் போட்டு போராட்டம்


சாலைப்பணியாளர்கள் பட்டை, நாமம் போட்டு போராட்டம்
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:45 PM GMT)

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் பட்டை, நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

விழுப்புரம்

பட்டை, நாமம் போட்டு போராட்டம்

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் கோட்டங்கள் சார்பில் பட்டை, நாமம் போட்டு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் அரியலூர் காமராஜ், பெரம்பலூர் ராஜ்குமார், விழுப்புரம் ஜெயராமன், கடலூர் ஜோசப் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணைத்தலைவர் ரவி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் விழுப்புரம் வீரமுத்து, பெரம்பலூர் சுப்பிரமணியன், அரியலூர் சிவக்குமார், கடலூர் ராமர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார்.

கோரிக்கைகள்

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களின் பணிநீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர்நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துபடி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கோட்டங்களை சேர்ந்த சாலைப்பணியாளர்கள் பட்டை, நாமம் போட்டுக்கொண்டு கோஷமிட்டவாறு போராட்டம் செய்தனர். இதில் பொருளாளர்கள் கருணாநிதி, அரிச்சந்திரன், சுப்பு, சரவணபவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பழனிவேல் நன்றி கூறினார்.


Next Story