தவறு செய்யும் குழந்தைகளுக்கு நூதன தண்டனைகளை அறிவித்த பள்ளி கல்வித்துறை


தவறு செய்யும் குழந்தைகளுக்கு நூதன தண்டனைகளை அறிவித்த பள்ளி கல்வித்துறை
x

மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்க வேண்டும்

சென்னை,

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை பள்ளிகளில் அமல்படுத்தவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால் முதலில் அக்குழந்தையின் கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பின்னர் முறையான ஆலோசனைகள் வழங்க வேண்டும். பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்துத்தர வேண்டும்.

பஸ்களில் தொங்கிக்கொண்டு பயணம், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், ஆசிரியர்களை அவமதித்தல், ராக்கிங், சாதி-மத அடிப்படையில் பிற குழந்தைகளை புண்படுத்துதல், உருவகேலி, பள்ளி சுவர்களில் படங்கள் வரைதல், தகாத வார்த்தைகள் பேசுதல் போன்றவை குழந்தைகள் அடிக்கடி செய்யும் தவறுகள் ஆகும்.

மேற்கண்ட செயல்பாடுகளில் ஈடுபடும் குழந்தைகளுக்கு முதலில் பள்ளி ஆலோசகர் தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும். அந்த குழந்தை 2-வது, 3-வது முறையாக இதே தவறை செய்தால் சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.

அதன் விவரம் வருமாறு:-

5 திருக்குறள்களை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதி காட்டவேண்டும். 2 நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்லவேண்டும். 5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்து காட்டவேண்டும். ஒரு வாரத்துக்கு வகுப்பு தலைவராக பொறுப்பேற்க வேண்டும். 5 வரலாற்று தலைவர்கள் பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.

நல்ல பழக்க வழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றி வரைபடம் (சாட்) எழுதவேண்டும். பள்ளியில் சிறிய காய்-கனி தோட்டம் அமைக்கவேண்டும். பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை வைத்து கைவினை பொருட்கள் தயாரிக்கவேண்டும். அந்த குழந்தைக்கு தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் தந்து ஏன் இந்த தவறை செய்தார்? என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

இதற்கு பிறகும் அந்த குழந்தை தவறை உணரவில்லை என்றால் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து குழந்தை நேய அதிகாரி மூலம் அறிவுரை வழங்கலாம். அதன்பின்னரும் தவறுகள் தொடர்ந்தால் அருகேயுள்ள அரசு பள்ளிக்கு அந்த குழந்தையை மாற்றலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story