காவிரி ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை தேடும் பணி தீவிரம்


காவிரி ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை தேடும் பணி தீவிரம்
x

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்

மதுரை வீரன் கோவில்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (திங்கட்கிழமை) திருவிழா நடத்த கிராமக்கள் முடிவு செய்து இருந்தனர்..

இதையொட்டி தோகைமலை அருகே உள்ள மேட்டுப்பட்டி, திருமாணிக்கம்பட்டி, சங்ககவுண்டம்பட்டி, குப்பாண்டிபட்டி, நல்லாகவுண்டம்பட்டி ஆகிய 5 ஊரைச் சேர்ந்த பங்காளிகள் உள்பட பலர் நேற்று காலை தீர்த்தக் குடம் எடுத்து வர குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கு சிலா் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர்.

ஆற்றில் மூழ்கிய சிறுவன்

அப்போது மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் குழந்தைவேலு (வயது 17). உள்பட 4 பேர் மட்டும் ஆற்றில் சற்று ஆழமான பகுதிக்கு ெசன்று குளித்துக் கொண்டிருந்தனர்.

தனியாக 4 பேர் மட்டும் குளிப்பதை பார்த்த அவர்களது உறவினர்கள் அவர்களிடம் பாதுகாப்பான இடத்திற்கு வந்து குளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ஆழமான பகுதியில் குளித்தபோது, தண்ணீரின் வேகம் காரணமாக குழந்தைவேலு மட்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

தேடும் பணி

அப்போது சிறுவன் தன்னை காப்பாற்றும்படி சத்தமிட்டு கொண்டே தண்ணீரில் மூழ்கியுள்ளான். ஆனால் அச்சிறுவனை அங்கிருந்தவா்களால் காப்பாற்ற முடியவில்ைல. இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கும், முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். குளித்தலை போலீசாரும் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து சிறுவனை தேடினர்.

மீட்பதில் சிரமம்

தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் குழந்தைவேலுவை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சிறுவன் மூழ்கிய இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். அதுபோல குளித்தலை பகுதியில் உள்ள மீனவர்கள் சிலரும் பரிசல் மூலம் ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடினர்.

இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இன்று காலையில் இருந்து காவிரி ஆற்றில் குழந்தை வேலுவை தேடும் பணி நடக்கிறது. இச்சம்பவத்தால் குழந்தைவேலுவின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். ஆற்றில் மூழ்கிய குழந்தைவேலு தோகைமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Next Story