கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி


கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி
x

புதுச்சத்திரம் அருகே கொய்யாப்பழம் பறிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

நாமக்கல்

கல்லூரி மாணவன்

புதுச்சத்திரம் அடுத்த கதிராநல்லூர் அருகே உள்ள கொம்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். இவரது மகன் தீபக், பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது மேல் படிப்பிற்காக தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இந்தநிலையில் தீபக் வீட்டின் கிணற்றின் அருகே உள்ள கொய்யா மரத்தில் பழம் பறிக்க சென்றார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு தீபக் உடல் மேலே கொண்டுவரப்பட்டது. பின்னர் தீபக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சத்திரம் அருகே கொய்யாப்பழம் பறிக்கசென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story