சவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்


சவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
x

நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர், டுவிட்டர், ஃபேஸ்புக், யுடியூப், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story