கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் சாவு


கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
x

கூடங்குளம் அருகே கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.

நண்பர்கள்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பத்மநாதன் மகன் ஆல்பர்ட் (வயது 24), ராஜாமணி மகன் சந்தனகுமார் (23). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தங்கியிருந்து கடலில் மீன்பிடிக்க சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர்கள் இருவரும் கடந்த 30-ந்தேதி செட்டிகுளம் பகுதியில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொலை வழக்காக மாற்றம்

இதில் ஆத்திரமடைந்த சந்தனகுமார் கத்தியால் ஆல்பர்ட்டின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஆல்பர்ட்டை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தனகுமாரை கைது செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆல்பர்ட் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சந்தனகுமார் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story