விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங்கிற்கு ஜாமீன்


விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங்கிற்கு ஜாமீன்
x
தினத்தந்தி 15 Dec 2023 12:48 PM GMT (Updated: 15 Dec 2023 1:15 PM GMT)

அம்பை முன்னாள் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிற்கு நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்பட 15 பேர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 15 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் நீதிபதி திரிவேணி முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 15 பேரும் நேரில் ஆஜராகினர். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி ஆகிய 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


Next Story