வெள்ளத்தில் சிக்கிய மொபட்டை விட்டு விட்டு திருமணத்தை நடத்திய கோவில் பூசாரி


வெள்ளத்தில் சிக்கிய மொபட்டை விட்டு விட்டு திருமணத்தை நடத்திய கோவில் பூசாரி
x

காமலாபுரம் அருகே வெள்ளத்தில் சிக்கிய மொபட்டை விட்டு விட்டு கோவில் பூசாரி திருமணத்தை நடத்தி வைத்தார். திரும்ப வந்து பொதுமக்கள் உதவியுடன் மொபட்டை மீட்டார்.

சேலம்

ஓமலூர்:-

காமலாபுரம் அருகே வெள்ளத்தில் சிக்கிய மொபட்டை விட்டு விட்டு கோவில் பூசாரி திருமணத்தை நடத்தி வைத்தார். திரும்ப வந்து பொதுமக்கள் உதவியுடன் மொபட்டை மீட்டார்.

கோவில் பூசாரி

ஓமலூர் அருகே காமலாபுரம் பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலையில் திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தை நடத்தி வைக்க கோவில் பூசாரி அர்ச்சுனன் அழைக்கப்பட்டு இருந்தார். அவர், காமலாபுரம் சின்ன ஏரி நிரம்பி உபரிநீர் செல்லும் கால்வாய் பகுதியில் தன்னுடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அங்கு ஏரி நீருடன், மழைநீரும் சேர்ந்து கால்வாய் மற்றும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் பூசாரி அர்ச்சுனன் சென்ற மொபட் சிக்கியது. இதில் தடுமாறி விழுந்த பூசாரி செய்வதறியாது திகைத்தார். உடனே சுதாகரித்துக் கொண்ட அவர், அங்கிருந்த மரக்குச்சிகளை பிடித்து தண்ணீரில் இருந்து வெளியே வந்தார்.

திருமணம் நடந்தது

பின்னர் மொபட்டை அப்படியே போட்டு விட்டு நடந்தே கோவிலுக்கு புறப்பட்டார். மழை வெள்ளத்தில் பூஜை பொருட்கள் அனைத்தும் சேதமாகி விட்டது. மீண்டும் பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வந்தார். அங்கு திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைத்தார்.

அதன்பிறகு பொதுமக்களுடன் அந்த இடத்துக்கு சென்று மொபட்டை வெள்ளத்தில் இருந்து மீட்டார். ஏதாவது அபசகுணமாக நினைத்து விடுவார்களே என நினைத்து திருமணம் முடியும் வரை அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை பூசாரி கூறவில்லையாம். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story