மழைக்கு 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது


மழைக்கு 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 18 Oct 2023 11:30 PM GMT (Updated: 18 Oct 2023 11:30 PM GMT)

பெரியகுளம், போடி பகுதிகளில் மழைக்கு 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமானது.

தேனி

பெரியகுளம் தென்கரை பாவாலி சந்தை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). இவரது மனைவி ரூபிணி. இவர்களுக்கு தமிழரசு என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். நேற்று அதிகாலை வீட்டில் வடிவேல், குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அவருடைய வீட்டுக்கு அருகில் பூட்டி இருந்த மற்றொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வடிவேல் வீட்டின் சுவர் சேதம் அடைந்தது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த வடிவேல் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதேபோல் போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில் புதூர் போயன் துறை சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இலவம் பஞ்சு வியாபாரி. நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு வீட்டின் ஒரு பகுதியில் உள்ள அறையின் சுவர் இடிந்து விழுந்தது. செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றொரு அறையில் டிவி பார்த்துக் கொண்டே அங்கேயே தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


Next Story