புதுவண்ணாரப்பேட்டையில் விளையாட்டு மைதான சுவர் இடிந்து விழுந்து 3 கார்கள் சேதம்


புதுவண்ணாரப்பேட்டையில் விளையாட்டு மைதான சுவர் இடிந்து விழுந்து 3 கார்கள் சேதம்
x

புதுவண்ணாரப்பேட்டையில் விளையாட்டு மைதான சுவர் இடிந்து விழுந்து 3 கார்கள் சேதமடைந்தது.

சென்னை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்துக்கு உட்பட்ட பாபு ஜெகஜீவன்ராம் விளையாட்டு மைதானம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த மழையின் காரணமாக இந்த விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் நள்ளிரவில் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது சுவர் அருகே யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் விளையாட்டு மைதான சுற்றுச்சுவரையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 3 கார்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததால் அந்த கார்கள் அப்பளம் போல நொறுங்கி சேதமடைந்தது.

அப்பகுதியில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாரும், சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story