பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உயர்வு


பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உயர்வு
x

அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது..

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியே அணையின் நீர்பிடிப்பு பகுதியாகும். 120 அடி உயரம் உள்ள இந்த அணையில் 105 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை தண்ணீரால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

இந்தநிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியிலும், கேரளாவிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 88.52 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் நீர்இருப்பு 20.6 டி.எம்.சி. ஆக உள்ளது.


Next Story