ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்தது


ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 4 Aug 2023 10:15 PM GMT (Updated: 4 Aug 2023 10:15 PM GMT)

கோத்தகிரி நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் 8 அடியாக குறைந்தது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் 8 அடியாக குறைந்தது.

தடுப்பணை

கோத்தகிரி அருகே கோடநாடு ஈளாடா கிராம பகுதியில் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 12 அடி ஆழமும் கொண்டது. அதன் அருகே மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுகளில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் சேகரமாகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் நீர் உந்து நிலையத்தில் உள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

பின்னர் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி தடுப்பணை நீரை நம்பி, தடுப்பணைக்கு அருகே உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கோடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

நீர்மட்டம் குறைந்தது

இதனால் ஈளாடா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. மேலும் தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக மழை பெய்யாமல், பலத்த காற்று வீசி வருகிறது. இதற்கிடையே தடுப்பணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தடுப்பணையின் நீர்மட்டம் 8 அடியாக குறைந்து உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாக கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால், குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார்கள் பழுதை நீக்கி, அந்த திட்டத்தின் கீழும் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கோத்தகிரி நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றனர்.


Next Story