காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்தது


காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்தது
x

காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்தது.

திருச்சி

ஜீயபுரம்:

மேட்டூர் அணை திறப்பு

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக கடந்த 9-ந் தேதி திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, அன்றைய தினம் இரவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து ஈரோடு, நாமக்கல் வழியாக நேற்று முன்தினம் காலை கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணையை வந்தடைந்தது.

முக்கொம்பு வந்தடைந்தது

பின்னர் காவிரி நீர் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. முக்கொம்புக்கு தண்ணீர் வரத்து காலை 6 மணி அளவில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. முக்கொம்புக்கு வந்த தண்ணீரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படையல் வைத்து, தேங்காய் உடைத்து, பூக்கள் மற்றும் நெல்மணிகளை தூவி வரவேற்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் வினாடிக்கு 6 ஆயிரத்து 27 கன அடியாக நீர்வரத்து இருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்கள் உள்பட சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் கடைமடைக்கு காவிரி நீர் சென்று அடையும் அளவுக்கு மீதமுள்ள தூர்வாரும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். கல்லணையில் நீர் திறந்து விடுவதை அரசு விழாவாக கடைபிடிப்பது போல் காவிரி, கொள்ளிடம் பிரியும் முக்கொம்பிலும் தண்ணீர் திறப்பை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் வலியுறுத்தல்

மேலும், தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரும் பணியை அரசு அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் என்றும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். முக்கொம்பு மேலணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கல்லணையை சென்று அடையும். இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் பாசனத்துக்காக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.


Next Story