போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x

போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருவாரூர்

திருவாரூரில், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வாலிபர் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்ற வழக்குகள்

திருவாரூர் நகர் பகுதி சபாபதி முதலியார் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவர் மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது விஜய், திருச்சியில் திரைப்படத்துறையில் கலை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி

அதன்படி திருவாரூர் டவுன் போலீசார், குற்ற வழக்குகளில் தொடர்புடைய விஜய்யை நேற்று அவரது வீட்டில் இருந்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது கழிவறைக்கு செல்வதாக விஜய் கூறிவிட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து வெளியில் வந்த விஜய், எந்த தவறும் செய்யாமல் நான் தற்போது வேலை பார்த்து வருகிறேன், ஏன் என் மீது வழக்கு போடுகிறீர்கள். நான் தற்கொலை செய்ய முடிவு செய்து கழிவறையில் எலிமருந்தை தின்று விட்டேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.

பரபரப்பு

இதையடுத்து போலீசார், விஜய்யை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவறைக்குள் எலிமருந்தை தின்றதாக விஜய், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story