கள்ளக்காதலனை விரட்டி அடித்து பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்கள்


கள்ளக்காதலனை விரட்டி அடித்து பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்கள்
x
தினத்தந்தி 2 Nov 2022 6:45 PM GMT (Updated: 2 Nov 2022 6:45 PM GMT)

மரக்காணம் அருகே தைலமர தோப்பில் கள்ளக்காதலனை விரட்டி அடித்துவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

விழுப்புரம்

வானூர்

கள்ளக்காதல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த பெண் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

கூட்டு பலாத்காரம்

அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பரும் அங்கு வந்தனர். அவர்கள், கள்ளக்காதலனை கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து விரட்டினர். இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதன்பின் தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை மிரட்டி எழில்பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்

இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்தி, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை முடிவு

நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே, வாழ்வதை விட சாவதே மேல் என்று அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். ஆனால் 3 மகள்களின் கதி என்ன ஆகும் என நினைத்து அந்த முடிவை கைவிட்டுள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் பணம் தராததால், அவரை மிரட்டும் வகையில் பெண்ணின் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாக தெரிகிறது. இதை அறிந்த அந்த பெண் மனவேதனை அடைந்தார்.

இந்தநிலையில் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story