வங்கிக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் பறித்த வாலிபர்கள்
![வங்கிக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் பறித்த வாலிபர்கள் வங்கிக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் பறித்த வாலிபர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/1578699-d673300b-d1da-4de5-a003-32a9fa225319.webp)
வங்கிக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரத்தை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
மங்களமேடு:
பணம் பறிப்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பத்மபிரியா(வயது 35). இவர், தனது மகள் அஸ்வந்திகாஸ்ரீயுடன்(10) வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, திருமாந்துறையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். அங்கு நகைக்கடனுக்கு வட்டி கட்டுவதற்காக, அதற்கான படிவத்தை அவர் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.
அப்போது அவரது மகள் தின்பண்டம் வாங்கித்தருமாறு கேட்டதால், அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அவர் நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், பத்மபிரியா கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கண்காணிப்பு கேமராவில்...
இதனால் அதிர்ச்சியடைந்த பத்மபிரியா, இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.