நல்லம்பள்ளி அருகேவக்கீல் குமாஸ்தா வீட்டில் 24½ பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு


நல்லம்பள்ளி அருகேவக்கீல் குமாஸ்தா வீட்டில் 24½ பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 17 Oct 2023 7:00 PM GMT (Updated: 17 Oct 2023 7:01 PM GMT)

நல்லம்பள்ளி அருகே வக்கீல் குமாஸ்தா வீட்டில் 24½ பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு போனது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே வக்கீல் குமாஸ்தா வீட்டில் 24½ பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு போனது.

வக்கீல் குமாஸ்தா

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). வக்கீல் குமாஸ்தா. இவருடைய மனைவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மனைவி பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து சீனிவாசன் வீட்டு கதவை பூட்டி விட்டு பழுதடைந்த செல்போனை சரி செய்ய தர்மபுரிக்கு சென்றார்.

பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் 24½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவற்றை மர்மகும்பல் திருடி சென்றது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து சீனிவாசன் அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வக்கீல் குமாஸ்தா வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story