நூதன முறையில் மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு

நூதன முறையில் மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (வயது 65). இவரது கணவர் அசோக்குமார் இறந்த நிலையில் அதே பகுதியில் தம்பி ஆனந்த்குமார் வீட்டில் வசித்து வருகிறார்.
ஆனந்த்குமார் சென்னையில் படிக்கும் மகனை நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்திற்கு சென்று அழைத்து வருவது வழக்கம். இதனையறிந்த மர்ம நபர் வீட்டில் தனியாக இருந்த வனிதாவிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தண்ணீர் கொடுத்த பின்பு அந்த மர்ம நபர் தனக்கு மயக்கம் வருகிறது எனக் கூறியதால் வனிதா வீட்டிற்குள் அழைத்து அமர செய்கிறார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வனிதாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை மர்ம நபர் அறுத்துக் கொண்டு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார்.
இச்சம்பவம் குறித்து வனிதா கொடுத்த புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.