தேனி புத்தக திருவிழா:மார்ச் 3-ந்தேதி தொடங்குகிறது


தேனி புத்தக திருவிழா:மார்ச் 3-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

தேனி புத்தக திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்குகிறது.

தேனி

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், தேனி புத்தக திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது. தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் இந்த புத்தக திருவிழா நடக்கிறது. அங்கு புத்தக அரங்குகள், கலை நிகழ்ச்சிகளுக்கான கலையரங்கம், உணவகங்கள் போன்றவை அமைப்பதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசும்போது, "புத்தக விற்பனை அரங்குகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏதுவாக தற்காலிக சாய்தள வசதி அமைக்க வேண்டும். புத்தக திருவிழா நடக்கும் இடத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும்" என்பன உள்பட பல்வேறு அறிவுரைகளை அரசுத்துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story