தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்


தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x

தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழா

தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.மதியம் 12 மணி அளவில் சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து ரங்கசாமி, மல்லிகார்ஜுனா சாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் திகனாரை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலாவாக சென்று அங்குள்ள குளத்தை அடைந்தது.

சிறப்பு பூஜைகள்

அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குளத்தின் நடுபகுதிக்கு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு குளத்து தண்ணீரில் தேர்வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரத்தை வைத்து குளத்தை 3 முறை சுற்றி வந்தனர். குளத்தின் கரையில் பக்தர்கள் நின்று தெப்ப திருவிழாவை கொண்டாடினர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டினர்.

இதையடுத்து குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊர்வலமாக எடுத்துவரபட்டது. பின்னர் பக்தர்கள் சாமிக்கு பூக்கள் வைத்தனர். திருவிழாவில் தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story