கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு


கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
x

பிரதமர்களை, ஜனாதிபதிகளை தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் கலைஞர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியது 'கலைஞர்' என்பதைத்தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான்!

'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்' என்பதைத்தான். கலையுலகுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இருந்த உறவுக்கு அப்பெயரே சிறந்த சான்று.

"Art should comfort the disturbed and disturb the comfortable" என்ற வரிக்கேற்பத் தம் படைப்புகளில் எல்லாம் அரசியலை நுழைத்து, சமூக இழிவுகளைச் சாடிய அசலான கலைஞருக்கு அவரது தாய்வீடாம் தென்னகத் திரையுலகத்தின் சொந்தங்கள் எல்லாம் கூடி எடுத்த #கலைஞர்100 மாபெரும் கலைவிழா கண்டு - அக்காவியத் தலைவனின் கொள்கை வாரிசாக, அவர் பண்படுத்திய தமிழ் மண்ணின் முதல்-அமைச்சராக அகமகிழ்கிறேன். அவரது மகனாக நன்றி நவில்கிறேன்.

65 ஆண்டு காலம் அவர் பயணித்த துறையில் இருந்து திரண்டு வந்து அவர் நினைவைப் போற்றிய திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி! நன்றி!

கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை!" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



Next Story