அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு


அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:46 PM GMT)

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்

செம்மண் குவாரி வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

சாட்சிகள் விசாரணை தொடங்கியது

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை.

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியாக இவ்வழக்கின் புகார்தாரரான அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்தவரும், தற்போது ஓய்வு பெற்றவருமான குமாரபாலன் விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகினார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் உறவினர்கள் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து நீதிபதி முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.

பிறழ் சாட்சியம் அளித்தார்

அப்போது அந்த காலகட்டத்தில் எனக்கு மேல் இருந்த அதிகாரிகள் கூறியதன்பேரில்தான் புகார் அளித்தேன் என்று அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ்சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் என்று நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான குமாரபாலன் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ்சாட்சியம் அளித்ததால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story