தூய இஞ்ஞாசியார் ஆலயத்தில் தேர்பவனி


தூய இஞ்ஞாசியார் ஆலயத்தில் தேர்பவனி
x

இலுப்பூர் அருகே உள்ள சாத்தம்பட்டியில் தூய இஞ்ஞாசியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை

தூய இஞ்ஞாசியார் ஆலயம்

இலுப்பூர் அருகே உள்ள சாத்தம்பட்டியில் தூய இஞ்ஞாசியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர விழாவான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு திருப்பலியை ஜேம்ஸ் செல்வநாதன் நிறைவேற்றினார். பின்னர் மின் அலங்கார தேர்பவனியானது மந்திரித்து புனிதம் செய்து ஆலயத்தை சுற்றியும், ஒவ்வொரு வீதிகளிலும் புனிதர்களின் சொரும் தாங்கிய சப்பரத்தை கிறிஸ்தவர்கள் கொண்டு சென்று வழிபட்டனர். பின்னர் கண் கவரும் வாண வேடிக்கையுடன் கூடிய மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

கொடி இறக்கம்

இதில் முதல் சப்பரத்தில் மைக்கேல் சம்மனசும், 2-வது சப்பரத்தில் சூசையப்பரும், 3-வது சப்பரத்தில் புனித இஞ்ஞாசியாரும் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். அப்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி, மாலை, ஊதுபத்தி, தூபம் காட்டியும், காணிக்கை செலுத்தியும் புனிதர்களை வழிபட்டனர். மேலும் சப்பரம் வீதிகளில் வலம் வரும்போது உப்பு, பொட்டுக்கடலை உள்ளிட்டவைகளை தூவி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சப்பரமானது காலை 6 மணிக்கு ஆலயத்தின் நிலைக்கு வந்தடைந்தது. இந்த திருவிழாவை காண மகுதுபட்டி, பாணிபட்டி, இருந்திராப்பட்டி, விட்டானிலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பின்னர் கொடி இறக்கம் நடைபெற்றதை தொடர்ந்து திருவிழா நிறைவுபெற்றது.


Next Story