சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மறியல் போராட்டம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்


சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மறியல் போராட்டம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்
x

ஜவ்வாதுமலையில் காவலூர் அருகே சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி,

ஜவ்வாதுமலையில் காவலூர் அருகே சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

அடிக்கடி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ். புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல மலைசாலை, பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியிலிருந்து ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த மலைசாலை பயன்படுகிறது. காவலூரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் வசித்து வரும், மலைவாழ் மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட தங்களது அவசர தேவைகளுக்கு இந்த மலைசாலையையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்த சாலை மிகவும் குறுகலாக இருக்கின்ற காரணத்தினால், அவ்வப்போது விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

2 அடி உயர்ந்தது

இதனை கருத்தில் கொண்டு, சாலையை அகலப்படுத்தி தரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 4 மாதத்திற்கு முன்பு பழைய சாலை மீது புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது. இதனால், சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்து விட்டதால், எதிர் திசையில் பயணிக்கும் இரண்டு வாகனங்கள் சந்திக்கும்போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 2 அடிக்கும் கீழே உள்ள பள்ளத்தில் வாகனங்களை இறக்குவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முயலும்போது, கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை தொடர்வதால், பக்கவாட்டில் உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் அரசுக்கு கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.

சாலை மறியல்

கடந்த மாதம் சாலையை அகலப்படுத்த வந்திருந்த மாநில நெடுஞ்சாலை துறையினரை, வனத்துறையினர் அனுமதி இன்றி சாலையை அகலப்படுத்த முடியாது என்று தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு காவலூரில் இருந்து ஆலங்காயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை எதிரேவந்த பஸ்சுக்கு வழிவிடும்போது பள்ளத்தில் விழுந்து கை கால் முடிவு ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நின்றது.

இதுபற்றி தகவலறிந்து வந்த ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை உடனடியாக தொடங்கவிட்டால் சாலை மறியலை கைவிட மாட்டோம் என கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சமைத்து சாப்பிட்டனர்

சாலை மறியலின் போது, தனியார் பஸ்சை சிறைபிடித்தும், சாலையின் குறுக்கே மரங்களை வெட்டி போட்டும் போக்குவரத்தை முற்றிலும் துண்டித்தனர். மேலும், சாலையின் அருகே உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் உணவு வழங்கினர்.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் லோகநாதன், திருப்பத்தூர் உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், தாசில்தார் சம்பத், இன்ஸ்பெக்டர் பழனி, வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் சாலை அகலப்படுத்தும் பணியை முடித்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் 6 மணி நேர சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story