டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி


டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 19 Jun 2023 9:48 AM GMT (Updated: 19 Jun 2023 12:05 PM GMT)

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் தப்பியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் தப்பியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் மதுக்கடை

திருவண்ணாமலை- வேலூர் செல்லும் சாலையில் கருந்துவாம்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் 10 மணியளவில் கடையை பூட்டி விட்டிற்கு சென்று உள்ளனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் (இரும்பு கதவு) மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செனறனர். அப்போது டாஸ்மாக் கடையின் ஷட்டரை ஆயுதங்களால் வளைத்த கொள்ளையர்கள் உள்ளே சென்று சில மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கடையின் உள்ளே இருந்த லாக்கரை உடைக்க முயன்றதாக தெரிகிறது. அதன் உறுதித்தன்மையால் கொள்ளையர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.7 லட்சம் தப்பியது

இதனால் கடையின் உள்ளே இருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மது விற்பனை பணம் சுமார் ரூ.7 லட்சம் தப்பியது.

மேலும் டாஸ்மாக் மதுக்கடை அருகில் உள்ள அறையில் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் வைத்திருந்த 9 அரிசி மூட்டையை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை உடைத்த மர்ம நபர்கள் அதன் அருகாமையில் உள்ள 2 கடைகளின் கதவுகளையும் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு அங்கு எதுவும் கிடைக்காததால் தப்பியுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story