மார்த்தாண்டம் அருகேமகாவிஷ்ணு கோவிலில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்போலீஸ் விசாரணை


மார்த்தாண்டம் அருகேமகாவிஷ்ணு கோவிலில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்போலீஸ் விசாரணை
x

மார்த்தாண்டம் அருகே உள்ள மகாவிஷ்ணு கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள மகாவிஷ்ணு கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மகாவிஷ்ணு ஆலயம்

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை சந்திப்பில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மகாவிஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை என இருவேளைகளில் பூஜைகளும், விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கோவில் வளாகத்தில் 2½ அடி உயரத்தில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் காணிக்கைகள் செலுத்தி வந்தனர். இந்த காணிக்கைகளை ஆண்டுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் உண்டியலை திறந்து எண்ணுவதற்கு நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருந்தனர்.

உண்டியலை தூக்கிச் சென்றனர்

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் வழக்கமான பூஜைகள் செய்வதற்காக ஊழியர்கள் கோவிலை திறந்தனர். அப்போது, வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் ஸ்ரீகாரியம் முத்து செல்வன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் கோவில் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்து இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. ேமலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகவில்லை.

தோட்டத்தில் கிடந்த உண்டியல்

இதற்கிடையே அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் உண்டியல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று உண்டியலை பார்த்தனர்.

அப்போது, உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை தூக்கிச்சென்று பணத்தை கொள்ளைடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story