மதுரையில் சிகிச்சை பெறும் மீனவருக்கு திருமாவளவன் ஆறுதல்


மதுரையில் சிகிச்சை பெறும் மீனவருக்கு திருமாவளவன் ஆறுதல்
x

இந்திய கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெறும் மீனவருக்கு திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

மதுரை

நடுக்கடலில் மீன்பிடித்தபோது, இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வீரவேலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து தொல்.திருமாவளவன் கூறுகையில், "இந்திய கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர், கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை நன்கு தேறி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளார். ஓராண்டுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் அவர் இருக்கிறார். எனவே தமிழக அரசு வழங்கிய நிதி உதவி போதாது. அவருக்கு, கூடுதலாக பொருள், நிதி உதவி வழங்க வேண்டும். பா.ஜ.க. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள ஓர் இயக்கம். ஆனால், ஆர்.எஸ்.எஸ். திரைமறைவில் செயல்படக்கூடிய இயக்கம். அதனாலேயே அதனை நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.


Related Tags :
Next Story