பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தளி:
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில்குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பஞ்சலிங்க அருவி
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகள் நீர்வரத்து ஏற்படுகிறது. வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகளில் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.
வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் பெய்த வடகிழக்கு பருவமழைக்கு பின்பும் அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியிலும் நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது. இந்த சூழலில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.பின்னர் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக உற்சாகமாக சென்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரும் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.இதனால் அருவி பகுதி மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.மேலும் சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலை ரசித்ததுடன் குடும்பம் குடும்பமாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.பின்னர் அடிவாரப்பகுதிக்கு வருகை தந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர். இதேபோன்று அமராவதி அணை மற்றும் முதலை பண்ணையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது