அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்


அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்
x
திருப்பூர்


பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் நள்ளிரவில் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது.

பஞ்சலிங்க அருவி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.

வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும் போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.

இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுமார் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது.

சுற்றுலா பயணிகள்

வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.

இதனால் அதில் குளித்து புத்துணர்வு வருவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

பலத்த மழை

இந்த சூழலில் நேற்றுமுன்தினம் இரவு பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டியது. அந்த தண்ணீர் அடிவாரப் பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று, சப்தகன்னிமார் கோவில், விநாயகர், சுப்பிரமணியர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்த சூழலில் வெள்ளத்தின் சீற்றம், படிப்படியாக குறைந்ததால் கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றது. ஆனால் வானம் மேக மூட்டமாக காணப்பட்டதுடன் பலத்த மழை பெய்வதற்கான சூழல் நிலவியது.

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story