திருத்தணி முருகன் கோவிலில் நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம்


திருத்தணி முருகன் கோவிலில் நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம்
x

விடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர்

முருகன் கோவில்

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.முருகன் கோவிலில் திருமணம் செய்தால் சிறப்பு என்பதால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறும். முகூர்த்த நாட்களில் திருத்தணி கோவில் மற்றும் தனியார் மண்டபங்கள் நிரம்பி வழியும். இந்த நாளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும்.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் மலைக்கோவிலில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசல்

இதனால் காலை முதலே மலைக்கோவிலுக்கு திருமணத் தம்பதிகள் மற்றும் அவரது உறவினர்கள், வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் மலைக்கோவிலுக்கு சென்றதால் மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நெரிசலில் சிக்கியதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே ஈடுபட்டிருந்தனர்.

இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


Next Story